கன்னியாகுமரி மாவட்டம் கிரத்தூர் பகுதியில் M.Com.CA முடித்த பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேலைக்கு சென்று வரும்போது காவலரான ராஜேஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் ராஜேஷ் தனக்கு பெற்றோர் இல்லை எனவும் சிறு வயது முதலே பாட்டி தான் தன்னை வளர்த்து வந்ததாகவும் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து ராஜேஷ் மற்றும் இளம் பெண்ணுக்கு தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது ராஜேஷ் சார்பில் 5 நண்பர்கள் மட்டுமே வந்தனர். அதாவது தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று ராஜேஷ் கூறிவிட்டார். திருமணம் முடிந்த பிறகு ராஜேஷ் உடன் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறினீர்களே என்று கேட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக நித்திரவிளை காவல் நிலையத்திற்கு தகவல்  கொடுத்தார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடனடியாக ராஜேஷை கைது செய்தனர். இதற்கிடையில் இளம் பெண்ணின் உறவினர்கள் கோபத்தில் ராஜேஷை தாக்கினார். அவர்களிடமிருந்து ராஜேஷை காவல்துறையினர் மீட்டு கைது செய்தனர். மேலும் திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.