
இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றது. இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இருப்பினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது “தி கேரளா ஸ்டோரி என்பது பயங்கரவாதத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்திய படம். மத்தியப்பிரதேசத்தில் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது” என அவர் தன் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.