
கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன். இவர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது அம்மன் அர்ஜுனன் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கின் எதிரொலியாக தான் தற்போது அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. அம்மன் அர்ஜுனன் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஊழல் நடக்காத துறையே இல்லை.
நாடறிந்த “ஊழல் திலகங்களான” இவர்கள், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளையும், அதனை சரிசெய்ய வக்கில்லாத தங்கள் நிர்வாகத் திறமையின்மையையும் மறைக்க, திசைதிருப்ப ஏவும் ஆயுதங்களில் ஒன்றாக மாறிவிட்டது “லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை”. அதிலும், கடந்த சில வாரங்களாக ஊர் ஊராக செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான் நடத்தும் காட்டாட்சிக்கு மக்களிடையே இருக்கும் பெரும் வெறுப்பையும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற மக்களின் ஒருமித்த எண்ணத்தையும் உணர்ந்ததன் Knee Jerk Reaction தான் நம் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது ஏவப்பட்டுள்ள இந்த சோதனை.
இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்புச் சகோதரர் திரு. அம்மன் K. அர்ஜுனன் அவர்கள் திறம்பட செய்து வரும் கழகப்பணியை தடுக்கும் விதமாக , லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை செய்வது வெட்கக்கேடானது, தீயசக்தி திமுக தெரிந்து கொள்ளட்டும்,
இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும்,எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம்! 2026-ல் வெல்வோம்! நல்லாட்சி அமைப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.