
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி(70). இவரது மனைவி தெரசா(65). இந்த தம்பதியினருக்கு விக்டோரியா, சகாயராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட தெரசா சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். விக்டோரியா தனது தாயுடன் இருந்து அவரை கவனித்து கொள்கிறார். நேற்று முன்தினம் சகாயராணி தனது தாயை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றார். வீட்டில் லூர்துசாமி மட்டும் இருந்தார். அவருக்கு துணையாக தெரசாவின் தங்கை எலிசபெத் உடன் இருந்தார். நேற்று லூர்துசாமியின் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்m அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உடம்பில் காயங்களுடன் லூர்துசாமியும், கழுத்தறுக்கப்பட்டு எலிசபெத்தும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இரண்டு பேரையும் தாக்கி கொலை செய்து விட்டு வீட்டிற்கு தீ வைத்து சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.