
ராஜபாளையம் அருகே அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மர்ம நபரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. தொடர்ந்து போலீசார் தேடியதில் அவரது உடல் வேறு இடத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் பூவையா (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மனைவியிடம் சொல்லிவிட்டு மாடுகளை மேய்க்கச் சென்றுள்ளார்.
ஆனால் இவர் வீட்டிற்கு திரும்பாததால் பூவையாவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் தேடிய நிலையில் மர்ம நபரின் தலை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தேடியபோது போலீசார் உடலையும் கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அது தேடப்பட்ட பூவையா தான் என்பதும், அவர் மேய்த்த மாடுகளை விவசாய நிலத்தில் மேய விட்டதால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஒரு பாதுகாப்பு காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.