
திருவாரூர் மாவட்டம் சிங்களாத்தி பகுதியில் கூரை வீட்டில் ஆனந்தராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் ஆனந்தராஜ் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை கன மழை பெய்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆனந்தராஜ் மீது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கி ஆனந்தராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனந்தராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் இடிந்து விழுந்த ஆனந்தராஜின் கூரை வீட்டை மேற்பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.