
தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தொழிலாளர்களுக்கான ஊதிய நிலுவை தொகையை விடுவிக்குமாறு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகை ரூபாய் 1,678 கோடியை உடனே விடுவிக்குமாறு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப்பகுதிகளில் உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் கிராமங்களை மேம்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் 13-3-2024 அன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும் மேலும், ஊரக மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை வழங்குவதுடன், நீடித்த மற்றும் நிலையான ஊரக சொத்துக்களை உருவாக்கி உள்ளூர் மக்களின் முனைப்பான பங்கேற்புடன் கிராமங்களை மேம்படுத்தும் ஒரே திட்டமாகும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் அனைவரையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 86 விழுக்காடு மகளிர், 29 விழுக்காடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர் என்பதையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அளவீடுகளில் தமிழ்நாடு எப்போதும் திட்ட செயலாக்கத்தில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுவரை, மூன்று தவணைகளில் 37 கோடி மனித சக்தி நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் 06.03.2024 வரை தமிழ்நாடு 40.51 கோடி மனித சக்தி நாட்களை எட்டியுள்ளது என்றும் இதில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79.28 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2023 -24 ஆம் ஆண்டில், 06.11.2024 வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஊதியமான ரூ.8,734.32 கோடி நிலையில், ரூபாய் 7,712.03 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் நவம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான ஊதியப் பொறுப்பு 05.01.2024 அன்று ரூ. 1,022.29 கோடியாக உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக தாம் 10.01.2024 அன்று ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியதையடுத்து, ஒன்றிய அரசு 15.01.2024 மற்றும் 30.01.2024 ஆகிய நாட்களில் ரூபாய் 1,388.91 கோடி ஊதியத்தை விடுவித்தமைக்காக தனது நன்றியையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், நவம்பர் 2023 கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததால், அதனுடன் பொறுப்புத் தொகையும் ரூ.1,678.83 கோடியாக சேர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இது டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டி உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்பு தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் அமைச்சர் அவர்களின் தனிப்பட்ட தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்”.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. @girirajsinghbjp அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/ZB7t2i6tgW
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 14, 2024