விருதுநகர் மாவட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் நந்தகுமார் என்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு அவருக்கு அருகே அமர்ந்திருந்த பாண்டியராஜனுக்கும் பொன்னாடை அணிவிக்க சென்றார். அப்போது ராஜேந்திர பாலாஜி யார் மாவட்ட செயலாளர் என தெரியாதா? என கேட்டவாறு நந்தகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பல கட்சிகளுக்கு சென்று வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகியை கன்னத்தில் அறைந்தேன். மாவட்ட செயலாளராக நான் இருக்கும் போது பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்து விடுவேன்.

கட்சியை காட்டி கொடுத்தவர் பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர் தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள். என்னைப் பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய் பாண்டியராஜன்? வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில் தான் இருப்பேன். அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து ஈபிஸுக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது என ஆவேசமாக பேசியுள்ளார்.