மேற்குவங்க மாநிலத்தில் நடு ரோட்டில் ஒரு ஆண் மற்றும் பெண்ணை ஒருவர் பிரம்பால் அடித்து துன்புறுத்தினார். அவர்கள் வலியால் அலறி துடித்த நிலையில் அதனை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததோடு செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‌ நிலையில் உடனடியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் கள்ளக்காதலில் இருந்துள்ளனர்.

இவர்களுக்கு கிராமத்தில் நடந்த கட்டப்பஞ்சாயத்தில் பிரம்படி தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒருவர் மூங்கில் கம்பால் அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பிரம்பால் அடித்தவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தஜிமுல் ஆவார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ. ஹமீதுல் ரகுமானுக்கு நெருக்கமானவர் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அதோடு அங்கு தலிபான்கள் ஆட்சி நடப்பது போன்று இருப்பதாகவும் பாஜக கடுமையாக சாடியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இது தொடர்பாக யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இருப்பினும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் காவல்துறையினர் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து தஜிமுல்லை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.