
சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் பகுதியில் சேர்ந்த நாகராஜ் என்பவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது நெருங்கிய நண்பருக்கு 10 வயது மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் நாகராஜ் வீட்டிற்கு அருகே சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். தனது அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்த சிறுமி உரிமையோடு நாகராஜின் வீட்டிற்குள் சென்று டிவி, லேப்டாப் பார்த்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு நாகராஜ் அந்த சிறுமியின் தம்பிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து வெளியே அனுப்பினார்.
அதன் பிறகு சிறுமிக்கு தனது லேப்டாப் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.