
நாடாளுமன்றத்தில் இன்று மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார ஆய்வு அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது நாட்டின் முக்கிய பொருளாதார அளவீடுகள் இந்த ஆய்வறிக்கையில் காட்டப்படும் நிலையில் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வளர்ச்சி குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு நாட்டின் ஜிடிபி வளர்ச்சியானது 6.5 சதவீத முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு உலக அளவில் பொருளாதார செயல்திறன் நிலையற்ற தன்மையில் இருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டின் நிதி ஆண்டில் இந்தியாவில் மட்டும் உள்நாட்டு வளர்ச்சிகள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. புவிசார் அரசியல் மோதல்களின் ஆக்கிரமிப்பு மற்றும் அதன் தாக்கம் போன்றவைகள் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கோட்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. உலகளவில் பல்வேறு பிரச்சினைகளால் பணவீக்கம் தூண்டப்பட்ட போதிலும் நிர்வாகம் மற்றும் பணவியல் கொள்கை நடவடிக்கையால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சில்லறை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்த நிலையில் இந்த வருடம் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் உலக அளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவும் போதிலும் இந்தியாவில் மட்டும் விலை ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.