
தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் மற்றும் அண்மையில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இந்தியில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து உள்ளார். இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொண்டுள்ள ஐஸ்வர்யா ராயிடம் அதிக படங்களில் நடிக்காதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, நிறைய பேர் நீங்கள் ஏன் அதிக படங்களில் நடிப்பது இல்லை என என்னிடம் அடிக்கடி கேட்கின்றனர். நான் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என பலரும் எதிர்பார்ப்பதால் இந்த கேள்வியை எழுப்புகின்றனர். என் திறமையை அடையாளம் கண்டு இப்படி கேட்பதை பெரிய விருது போல் நினைக்கிறேன். எது ரசிகர்களுக்கு பிடிக்கும் நல்ல கதையென தோன்றுகிறதோ அதில் நடிக்கிறேன். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்தபோது ஒரு மாணவி போல் ஒவ்வொரு வசனத்தையும் எழுதி கற்றுக்கொண்டு நடித்தேன்” என்று கூறினார்.