
சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரங்கள் அதிக வாடகையில் இயங்குவதாக விவசாயிகளிடமிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது, சக்கர வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1600 என்று வாடகையும், செயின் வகை அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.2400 என்ற வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி கூடுதலாக அறுவடை அறுவடை எந்திரங்களில் பணம் வசூலித்தால் அது குறித்து விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் வேளாண்மை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்.
மேலும் விவசாயிகளின் நன்மைக்காக வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக மாநில அளவில் உள்ள தனியார் அறுவடை இயந்திரங்களின் பதிவு எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டு உழவன் செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் உழவன் செயலில் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்பதை தேர்வு செய்து மாவட்டம் மற்றும் வட்டார வாரியாக நெல் அறுவடை எந்திரம் சொந்தமாக வைத்துள்ள உரிமையாளர்கள் விவரம் மற்றும் தொலைபேசி எண்களை நேரடியாக தொடர்பு கொண்டு இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரங்களை பெற்று பயன் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.