தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் அண்ணாதுரை பேபி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 19-ஆம் தேதி பேபி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேபியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பேபியின் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. ஆனால் திருமணம் பிடிக்காததால் இளைய மகள் சென்னைக்கு படிக்க சென்றார். பின்னர் மகளின் திருமணம் நின்ற வேதனையில் பேபி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.