மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை. அதாவது தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் நிதியை விடுவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்  மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை ஏற்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏற்க முடியாதா என்று கேள்வி எழுப்பினார். அதன்பிறகு தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது, “They have to come to the terms of the Indian Constitution” என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘rule of law’ என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும். மேலும் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று ஒன்றிய அரசு மிரட்டுவதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா? தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என்று பதிவிட்டுள்ளார்.