புதுக்கோட்டை மாவட்டம் கீழக்காயம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ராஜேஸ்வரி பிள்ளைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீரமுத்து தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் நாடகத்தை பார்த்துவிட்டு நேற்று அதிகாலை கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த வீரமுத்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.