தமிழகத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை அதே பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பள்ளியினை சேர்ந்த மாணவ மாணவிகள் எழுதினர். அப்போது ஒரு வகுப்பறையில் 6 மாணவிகள் மற்றும் 5 மாணவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் தேர்வினை எழுதிக் கொண்டிருந்தனர். அந்த தேர்வறையின் கண்காணிப்பாளராக ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர் சம்பத்குமார் இருந்தார். அவர் மாணவிகள் காப்பியடிக்கிறார்களா பிட் அடிக்கிறார்களா என்று சோதனை செய்வது போன்று தொடர்ந்து 6 மாணவிகளிடமும் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் மாணவிகள் பொது தேர்வு என்பதால் அமைதியாக தேர்வினை எழுதினர். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவசரமாக தேர்வறையை விட்டு வெளியேறிய மாணவிகள் தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வரிடம் விவரத்தை கூறினர். அதன்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி போலீசார் சம்பத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றம் உண்மை என்பது தெரிய வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.