
சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அசோக் குமார்(40)-தவமணி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். அசோக்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு வித்யா தாரணி(13) அருள் பிரகாஷ்(5), அருள்குமாரி(10) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இன்று காலை தவமணியும் அவரது மூன்று பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் படுகாயமடைந்த அருள் பிரகாஷும் வித்யதாரணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தவமணி, அருள்குமாரி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அசோக் குமார் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை வெட்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். பெற்ற தந்தையே இரண்டு பிள்ளைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.