மகாராஷ்டிராவில் 2017ஆம் ஆண்டு, தனது தாயை கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. 63 வயதான யல்லமா ரமா குச்கொரவியை, அவரது மகன் சுனில் குச்கொரவி கொலை செய்ததோடு, அவரது உடல் பாகங்களை வெட்டி, எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த கொடூரச் செயலுக்கு காரணம், சுனில் மது குடிக்க தனது தாயிடம் பணம் கேட்டபோது, அவ்வாறு பணம் கொடுக்காததால் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சுனில் குச்கொரவி தனது தாயை கொலை செய்ததற்குப் பிறகு, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2021ஆம் ஆண்டு கோலாப்பூர் நீதிமன்றம், சுனில் குச்கொரவிக்கு மரண தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து, குச்கொரவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை, மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கின் போது, நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர், இந்த வழக்கு மிக அரிதானதொன்றாகும் எனக் கூறினர். குற்றவாளி தனது தாயை கொன்று, அவரது உடல் உறுப்புகளை அகற்றி, அவற்றை சமைத்து சாப்பிட்டுள்ளார் என்பதால், இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்காக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

நீதிபதிகள், குச்கொரவிக்கு ஆயுள் தண்டனை விதித்தால், அவர் பிற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும், அவரை திருத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனக்கூறினர். இதனால், அவருக்கு மரண தண்டனை வழங்கிய கோலாப்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதாக உயர்நீதிமன்றம் கூறியது.

மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, குச்கொரவி மேல்முறையீடு செய்யலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.