உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நம்பிக்கையுடன் வாங்கிய ஆப்பிள் ஐபோன் 13, ஒரு நபரின் பாக்கெட்டில் வெடித்து பயங்கரமாக எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் அந்த நபர் வாங்கியதாக கூறப்படும் அந்த போன், அவர் பேன்ட் பாக்கெட்டில் இருந்தபோது திடீரென வெடித்து தீப்பற்றியது. திடீரென நடந்த இந்த சம்பவத்தில், அந்த நபர் வலியால் அலறியபடியே எரிந்து கொண்டிருந்த போனை விரைவாக பாக்கெட்டிலிருந்து எடுத்து வீசியுள்ளார்.

இந்த விபத்தில் அவர் பலத்தமாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில், கறுப்பு நிறத்தில் இருந்த ஐபோன் 13 கடுமையாக எரிந்து அழிந்ததைக் காணலாம். வெடிப்பிற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்காக பெரிதும் நம்பப்படும் ஆப்பிள் பிராண்ட் போனில் இந்த திடீர் வெடிப்பு, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.