
சென்னை மாவட்டத்தில் உள்ள மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய இளம்பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மாதா சர்ச் ரோட்டில் இருக்கும் ஆட்டுக்குட்டி சபை சர்ச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்வேன். அங்கு கெனிட் ராஜ் (47) என்பவர் பாதிரியாராக உள்ளார். கடந்த சில நாட்களாக எனக்கு மன உளைச்சல் இருப்பதாக கூறியதற்கு எனது உடம்பில் ஆவி, பிசாசு ஏதாவது புகுந்து இருக்கலாம் என கூறினார்.
மேலும் வீட்டிற்கு வா நான் ஜெபித்து சரி செய்கிறேன் என கூறியதால் கடந்த 16-ஆம் தேதி அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் எனது உடம்பில் ஆங்காங்கே கை வைத்து கட்டி பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்து அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து நடந்த சம்பவத்தை எனது கணவரிடம் தெரிவித்தேன். எனது குடும்பத்தாரிடம் ஆலோசனை செய்துவிட்டு இப்பொழுது புகார் அளிக்கிறேன். அந்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கெனிட் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.