திருப்பூர் மாவட்டத்திலுள்ள மண்டல் புதூர் பகுதியில் கருப்பசாமி (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி என்ற மகன் இருக்கிறார். இவருடைய மகன்‌ மகேஷ் அரவிந்த் (30). இவருக்கு கடந்த 21ஆம் தேதி சத்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் செலாம் பாளையம் பகுதியில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென சத்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவருடைய நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.

அதன்பிறகு சத்யா வீட்டிற்கு திரும்பாததால் மகேஷ் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது சத்யா ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மகேஷின் தாத்தா கருப்பசாமி தன் பேரனின் வாழ்க்கையை நினைத்து மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவர் சம்பவ நாளில் பூச்சி மருந்து எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பசாமியின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.