சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மது போதையில் இருந்த திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தற்போது பாஜக கட்சியின் தேசிய பொறுப்பாளர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம்.
அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு. ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார்.