
திருப்பத்தூர் மாவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி தீபா(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தீபா வீட்டை விட்டு வெளியேறி ரமேஷின் தங்கை வரலட்சுமி வீட்டிற்கு சென்றார். இதனை அறிந்த ரமேஷ் வரலட்சுமியின் வீட்டிற்கு சென்று மனைவியை அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த ரமேஷ் அரிவாளால் தீபாவை சரமாரியாக வெட்டினார். இதனால் சம்பவ இடத்திலேயே தீபா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.