உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் மனதை கலங்க செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த புஷ்பேந்திரா காங்க்வார் என்ற நபர், ஆன்லைன் கேமிங் அடிமையால் கடனில் மூழ்கி கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளார்.

இட்சத்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிரிலோக் விஹார் காலனியில் வசிக்கும் இவர், கடந்த புதன்கிழமை மாலை வீட்டை அமைதியாக விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இரவு ஆனதும் வீடு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவரது மொபைல் போனும் அணைக்கப்பட்டிருந்ததால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், புஷ்பேந்திராவின் மனைவி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. “நீ எங்கே இருக்கிறாயோ என தெரியவில்லை… ஆனால் தயவுசெய்து வீடு திரும்பிவா. எனக்கும், பிள்ளைகளுக்கும் நீ இல்லாமல் இருக்க முடியவில்லை” என பேசியுள்ளார்.

ஆன்லைன் கேம்களில் அவர் அதிகமாக நேரம் செலவழித்ததாலும், அதனால் ஏற்பட்ட கடனச்சுமையும், மன அழுத்தமும் அவரை இவ்வாறு திடீரென வீட்டை விட்டு செல்ல வைக்க வாய்ப்பு உள்ளதாக குடும்பத்தினர் கூறுகிறார்கள்.