திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் சகாதேவன்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்கு(30) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ருக்குவுக்கும் கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(35) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ராஜா கல் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜா கிடைக்கும் பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

மேலும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தும் தனது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி ராஜா ருக்குவிடம் பணம் கேட்டுள்ளார். ருக்கு பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் ராஜா தனது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது. இதனால் அலறி துடித்த ருக்குவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது மகள் மீது பெட்ரோல் ஊற்றியதால் கோபத்தில் சகாதேவன் ராஜாவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் அங்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது