
தென் மாவட்டங்களில் கடற்கரையின் அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதோடு காலை நேரத்தில் பொதுவான பனிமூட்டம் நிலவக்கூடும். அதன் பிறகு நாளை தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மார்ச் 11ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை,விருதுநகர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.