
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கல்லணை பகுதியில் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் எட்டு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது.
இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காளவாசலை சேர்ந்த திவாகர் (23), சாஸ்திர தெருவை சேர்ந்த வாணி கருப்பு மனைவி மதுமதி (26), சுந்தர நடப்பை சேர்ந்த சந்தோஷ் (23), நகரம் பட்டியை சேர்ந்த ராம்ஜி மற்றும் யுவராஜ், அருண்குமார் உள்ளிட்ட ஏழு பேரை நேற்று கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.