மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி ஆங்காங்கே வன்முறைகள் தொடங்கிய நிலையில் பாஜகவின் எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கம்பீர் இச்சம்பவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் “இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். இந்த பிரச்சினை மணிப்பூர் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதால் நான் ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்.

இந்த சம்பவம் மொத்த நாட்டின் தலையையும் தாழ்த்தியுள்ளது. எனவே இதனை யாரும் அரசியலாக்க கூடாது. இது ஒரு மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல மொத்த நாட்டிற்கும் அவமானத்தை ஏற்படுத்திய சம்பவம். மணிப்பூரில் நடந்த இச்சம்பவம் போன்று எதிர்காலத்தில் எந்த மாநிலத்திலும் நடக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.