ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாயர் பகுதியில் 24 வயது  இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம் பெண் தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பை மீறி மனதிற்கு பிடித்த காதலனை கரம்பிடித்துள்ளார். அதாவது இளம்பெண் ரவி பீல் என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம் பெண் தன் காதலனை திருமணம் செய்து கொண்டார். இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட இளம்பெண் மற்றும் அவருடைய கணவர் உயிருக்கு பயந்து போய் பல்வேறு இடங்களில் தங்கி பாதுகாப்பாக இருந்தனர்.

இறுதியில் இளம்பெண் வங்கிக்கு வருவது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் வங்கியில் சென்று காத்திருந்த நிலையில் அந்த பெண் தன் கணவருடன் வந்தார். அப்போது இளம்பெண்ணை அவருடைய கணவர் கண்முன்னே காரில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்குள் அந்த பெண்ணை அவர்கள் கொலை செய்து உடலை எரித்துவிட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதம் எரிந்துவிட்டது. மேலும் இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறை வாகிவிட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.