
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்த வேண்டும். அந்த போட்டிகள் வருகிற ஏழாம் தேதி நடக்க வேண்டும். வெற்றி பெற்ற மாணவர்களின் விவரத்தை எமிஸ் தளத்தில் 8-ஆம் தேதி உள்ளீடு செய்வது அவசியம்.
முதலிடம் பெற்ற வெற்றியாளர்களை வைத்து வருகிற 11-ம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி முதல் மூன்று வெற்றியாளர்களின் விவரங்களை 21-ஆம் தேதி எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இதனை அடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெரும் வெற்றியாளர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளை அரசு பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் திட்டமிட்டு நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்லும்போது கட்டாயம் ஒரு ஆண் ஆசிரியர் ஒரு பெண் ஆசிரியர் உடன் இருக்க வேண்டும். வட்டார அளவிலான போட்டிக்கு ஒரு வட்டாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய், மாவட்ட அளவிலான போட்டிக்கு ஒரு லட்ச ரூபாயும் நிதி விடுவிக்கப்படும். எனவே முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய வழிகாட்டுதலை பின்பற்றி மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகளை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.