
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் ஞானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அதோடு அடித்தட்டு ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக வழக்குகளில் ஆஜராகி அவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுத்தவர்.
கோவை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஞான பாரதிக்கு 76 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவர் தான் இறந்த பிறகு உடலை தானமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் விருப்படியே கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ஞானபாரதியின் உடல் மாணவர்கள் ஆராய்ச்சிக்காக தானமாக இன்று கொடுக்கப்பட்டது. மேலும் அவருடைய உடலை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர்.