கேரளாவின் காசர்கோடு மாவட்டம் பீதாடுக்கா கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம், பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான ரமிதா என்ற பெண், அங்கு மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அதற்கு எதிர்புறம் ஃபர்னிச்சர் கடை நடத்தி வந்த ராமாமிருதம் என்பவர், அடிக்கடி குடிபோதையில் ரமிதாவுக்கு தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து ரமிதா கட்டிட உரிமையாளரிடம் புகார் அளித்திருந்தார். இதனால், ராமாமிருதத்திடம் கடையை காலி செய்ய உரிமையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சூழ்நிலைக்கு காரணம் ரமிதா என எண்ணிய ராமாமிருதம், ரமிதாவை பழிவாங்க நினைத்தார்.

ஏப்ரல் 8 ஆம் தேதி மதியம் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரமிதா தனது கடையில் இருந்தபோது, ராமாமிருதம் திடீரென அவர் மீது தின்னர் எனப்படும் எளிதில் எரியும் திரவத்தை ஊற்றி, தீ கொளுத்தி போட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரமிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் 50%க்கும் அதிகமாக காயங்களால் ரமிதா உயிரிழந்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற ராமாமிருதத்தை அப்பகுதி மக்கள் விரைந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் ராமாமிருதத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.