புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சி நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது வளர்ப்பு மகன் கலையரசன். இந்த நிலையில் கலையரசனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கலையரசன் முதியவர்கள் 2 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கலையரசனின் மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் நந்தினி ஆகியோர் தங்க ராசுவின் வீட்டை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் வயதான தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உறவினர்களுடன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் அவர்களை அங்கிருந்து கிளப்ப முயன்ற போது ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து போலீசார் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.