உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை தக்காளி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென பசுமாடு ஒன்று குறுக்கே புகுந்ததால் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த தக்காளிகள் முழுவதும் சாலையில் சிதறியது. அந்த மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி கிலோ 100 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் லாரிக்கு பின்னால் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இரவு நேரம் என்பதால் தக்காளிகளை சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதோடு பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள் தக்காளியை திருடி விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் விடிய விடிய தக்காளிக்கு காவல் காத்தனர். மேலும் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் போலீசார் விடிய விடிய காவல் காத்தது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.