ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் ராணுவத்தினரை பார்த்தவுடன் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலடியாக ராணுவத்தினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்ற நிலையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதேபோன்று மற்றொரு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இந்த என்கவுண்டரில் தீவிரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் ராணுவத்தினர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அலமாரியில் ரகசிய குழி அமைத்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.