
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா சித்திக்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆயிஷாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஆறாம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்கு சிராஜுதீன் தனது குடும்பத்துடன் செல்ல முடிவெடுத்தார். அவர்கள் வீட்டில் இருந்து புறப்பட்டு சிராஜுதீன் வீட்டின் கதவை அடைத்தார்.
அப்போது காற்றின் வேகம் காரணமாக ஆண் குழந்தையின் தலையில் கதவு மோதியது. அதனை ஆயிஷா கவனிக்கவில்லை. பின்னர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குழந்தை அழுது கொண்டே இருந்தது. அப்போதுதான் குழந்தையின் தலையில் வீக்கம் இருந்ததை பெற்றோர் கவனித்தனர். உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
உடனடியாக திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளித்து குழந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அழுது கொண்டே இருந்த குழந்தைக்கு கடந்த பத்தாம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.