திருவாரூர் மாவட்டம் அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இதில் மூன்றாவது மகள் நிஷா சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிஷா மீண்டும் வெளிநாடு செல்வதற்காக நேற்று முன்தினம் தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கழிவறைக்கு சென்ற நிஷா நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரிகள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் நிஷா மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நிஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் போது நிஷாவும் கேரளாவை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் நிஷா கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.