தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதிய ரக சேலை விற்பனையை, நேற்று அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, மொத்தம் 150 கடைகள் உள்ளன. அவற்றில் 48 நவீனமாக்கப்பட்டுள்ளது. அதோடு விற்பனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு படித்த வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த இளம் மகளிருக்கான குர்த்தீஸ், கிராப் டாப், சார்ட்ஸ்  ரகங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

அதோடு 700 வகை பட்டுச் சேலை ரகங்களுடன், மூங்கில் இலையால் செய்யப்பட்ட துண்டு ரகங்கள் உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் கடையில் துணி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறப்புரிமை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 76 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. அந்த வகையில் நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாக தற்போது வரை 1.10 கோடி ரூபாய்க்கு துணிகள் விற்கப்பட்டுள்ளன. கோ-அப்டெக்ஸ் சார்பில் 1 கோடியே 77 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி, சேலை வழங்கப்படும். இதுவரை 45 லட்சம் வேஷ்டி சேலைகள் தயாராக உள்ளதாகவும், முதியோர் உதவித்தொகை பெறுபவருக்கு 100% வேஷ்டி சேலைகள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.