
சென்னை மாங்காடு அருகே, திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய போக்குவரத்து காவலர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக பணியாற்றி வந்த ஆனந்த், மௌலிவாக்கம் ராஜராஜன் நகர் பகுதியில் வசித்து வந்தார். ஏற்கனவே திருமணமான இவருக்கு குழந்தை இல்லாததால் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிருந்தார்.
அதற்குப் பிறகு, இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்ட நிலையில், தனது நடத்தை பிடிக்காமல் அந்த பெண் திருமணத்தை நிராகரித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த ஆனந்த், மதுபோதையில் வீடுகளையும், வாகனங்களையும் சேதப்படுத்திய சம்பவத்தில் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆனந்த், மீண்டும் திருமணம் செய்யுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்தார்.
ஆனால் பெண் தொடர்ந்து மறுத்ததால், அவர் பழைய தனிப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் போரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், நேற்று இரவு ஆனந்தை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.