
திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக காயத்ரி ஸ்கூட்டரில் தனது குழந்தையுடன் அவரை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் முத்தரசநல்லூர் ரயில்வே கேட் அருகே சாலையை கடந்து சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரியும், யாஷிகாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். வெண்ணிலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரக்கு வாகன டிரைவரான விஜய் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.