விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள பகுதியில் லோகேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் விக்ரம், சூரியா ஆகியோர் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர்கள், அண்ணனை காப்பாற்ற அவர்களும் கால்வாய்க்குள் குதித்தனர். அந்த கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் அடித்து சென்றனர். இதற்கிடையில் அவர்கள் காணாமல் போனதால் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 22 பேர் மீனவர்களின் உதவியோடு மீன்பிடி படகுகளில் கால்வாய்க்குள் சென்ற தேடினர். அப்போது லோகேஷ் தவறி விழுந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் சேற்றில் சிக்கியவாறு உடலை மீட்டனர். அதன் பின் நீரின் வேகம் குறைக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து கூபா டைவிங் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மொத்தம் 11 பேர் உதவியோடு கால்வாயில் மூழ்கிய இருவரின் உடலை தேடினர். அதன் பின் அவர்களது உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உடல் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.