
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை சேர்ந்த தியாகராஜன் என்பவர் தனது மனைவி பிரீத்தி, மகன் ஜெயப்பிரியன், தாயார் மனோன்மணி உள்ளிட்டோருடன் காரில் கிணத்துகடவில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர்கள் மீண்டும் காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் உடுமலை அருகே புறவழிச் சாலையில் சென்றபோது கார் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.