திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்ததால் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. அதில் நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது குழந்தைகள் அறுவை சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு இடது நுரையீரலில் மூச்சு குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளது கண்டறியப்பட்டது. 8 மாத சிறிய குழந்தைக்கு நுரையீரலில் சிக்கியுள்ள இரும்பு ஊசி போன்ற பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் அகநோக்கி சிகிச்சை செய்வதும், அறுவை சிகிச்சை செய்வதும், மயக்க மருந்து கொடுப்பதும் சிக்கலானது.

ஆகவே குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படாத வகையிலும் நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினால் ஆன அந்த பொருளை அகற்றுவதற்கு நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் சிறிய அளவிலான நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கியிருந்த அந்த பொருள் அகற்றப்பட்டது.

அகற்றிய பின் பார்த்த போது அவை குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்.இ.டி லைட் என உறுதி செய்யப்பட்டது. பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று மருத்துவமனையிலி ருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவை சேர்ந்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ராஜேஷ்குமார், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்களான ஸ்ரீனிவாச குமார், கருப்பசாமி, மயக்கம் மருந்து நிபுணர்களான சிவகுமார், பிரமோத் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சந்தோஷ் குமார் பாராட்டியுள்ளார்.