
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும் அவர்களுக்கு மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பலரும் பள்ளிக்கல்வித் துறையை விசாரித்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் போலியானது. இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மேலும் இது போன்ற மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.