கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ரயில் முன் பாய்ந்த நிலையில் இளம்பெண் மற்றும் வாலிபரின் உடல்கள் சிதறி கிடந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தற்போது மரணம் அடைந்தவர்கள் யார் என்ற விவரமும் அதற்கான காரணம் குறித்தும் தெரியவந்துள்ளது. அதாவது சந்தன தோப்பு பகுதியைச் சேர்ந்த அனந்து (18) என்ற வாலிபரும் கொச்சி களமசரி பகுதியைச் சேர்ந்த மீனாட்சி (18) என்ற பெண்ணும் இறந்தது தெரியவந்துள்ளது.

இதில் அனந்து கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் மீனாட்சி பிளஸ் 2 முடித்துள்ளார். சம்பவ நாளில் ஆனந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறிய நிலையில் மீனாட்சி மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக செல்வதாக வீட்டில் கூறியுள்ளார். இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் ரயில் முன்பு கட்டிப்பிடித்தபடி தற்கொலை செய்துள்ளனர். அதாவது இருவரும் instagram மூலம் பழகிய நிலையில் ஒரு மாதமாக காதலித்து வந்துள்ளனர். மேலும் இந்த ஒரு மாத காதலை பெற்றோர் ஏற்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.