
சென்னையில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சி அலுவலக வளாகத்திலேயே அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.