சிதம்பரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் (28) , சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அரவிந்த்குமாரும் (28) காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த போது காதல் மலர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரவிந்த்குமார் வேலைக்கு செல்லாமல், மது பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவி ஐஸ்வர்யாவை அடிக்கடி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், “நான் ஏன் சோறு போட வேண்டும்?” என மனைவியை கேள்வி கேட்டு, “நீ அனாதை” என்ற குற்றச்சாட்டு வைத்து அவமதித்து வந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.  கடந்த 21-ஆம் தேதி, ஐஸ்வர்யா திருமண நிகழ்ச்சிக்காக விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பியதும், தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்தவுடன் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர், பிரேதத்தை அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஐஸ்வர்யா தற்கொலை செய்வதற்கு முன் தனது கணவர் காரணம் என்று வாட்ஸ்ஆப் மூலம் ஒரு ஆடியோ செய்தியை அனுப்பியிருந்தார். அதில், “என் இறப்புக்கு என் கணவர் மட்டுமே காரணம். அவர் எனது ஈமச் சடங்குக்கு வரக்கூடாது” எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார்  நேற்று மாலை அரவிந்த்குமாரை கைது செய்தனர்.