விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்கள் குடும்ப நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்துவதை பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது பள்ளி மாணவர்களுக்கென்று இலவச மடிக்கணினி திட்டம், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை போன்ற பல்வேறு திட்டங்களை முடங்கியுள்ளது.

திமுக ஆட்சியில் தொடர்ந்து வரும் போதை கலாச்சாரம், பெண்கள் பாலியல் வன்கொடுமைகள், ஆளும் கட்சியின் கட்டப்பஞ்சாயத்துகள் குறித்தும், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ரிமோட் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிலை குறித்தும் பொதுமக்களிடம் விளக்கி கூற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறியுள்ளோம். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியதுக்கு பொதுச்செயலாளர் பழனிச்சாமி பாராட்டியுள்ளார். நானும் என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.