தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் கேள்விகள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று 4-ம் நாளாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சியினர் மட்டும்தான் நேரலையில் காட்டப்படுகிறார்கள் என்றும் சபாநாயகரும் காட்டப்படுகிறார் ஆனால் எதிர்கட்சியினரும் அவர்களுடைய கேள்விகளும் மறைக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும் நிலையில் அதனை மூடி மறைக்க ஆளும் கட்சியும் முயற்சி செய்வதாகவும் யார் அந்த சார் என்ற கேள்வியை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா திரு.ஸ்டாலின் அவர்களே?

எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? “#யார்_அந்த_SIR?” என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு?மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை! தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல!